Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Sunday, January 27, 2008

ஆண்களுக்கு ஓரிரு வார்த்தை.

இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாகத்தான் உள்ளது. இரவு பகல், வெளிச்சம் இருள், சத்தம் நிசப்தம், மேடு பள்ளம், வெப்பம் குளிர்ச்சி, உயர்வு தாழ்வு, வெற்றி தோல்வி என எல்லாமே இரண்டு வகைப்படும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் உலகம். இவற்றில் எதனையும் நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனேனில் இவை இரண்டும் complementary in nature. வெற்றி என்ற ஒன்று வேண்டுமானால் அது அடுத்தவனின் தோல்வியில்தான் கிடைக்கிறது. உங்களுக்கு இரவானால் அது மற்றொரு பாகத்தில் பகலாகிறது.

அது போலத்தான் எல்லா ஜீவராசிகளிலும் ஆண் பெண் என்று இரண்டாகப் படைத்தான். இவை ஒவ்வொன்றும் ஒரு அரை வட்டம், அதாவது விட்டம் போன்றது. இரண்டு விட்டங்கள் ஒன்று சேர்ந்தால்தான் அது வட்டம் எனும் முழுமையை அடைகிறது. (அதற்காக இரண்டு ஆணும் அல்லது இரண்டு பெண்ணும் ஒன்று சேர்ந்து நாங்கள் ஒரு வட்டம் போடுகிறோம் என்று சொல்லாதீர்கள், அது மகா மட்டம்). அது சேராதபோது அது முழுமை அடைவதில்லை. இரண்டு விட்டங்களிலே எது பெரியது அல்லது எதி சிறியது என்று கூற முடியுமா? இரண்டுமே சரி பாதிதான்.

மனிதனை விடக் கீழானது என்று நாம் கருதுகிறோமே மற்ற விலங்குகள், அவை நம்மை விட அறிவு வாய்ந்தவை. நாம்தான் நமக்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவைக் கொண்டு இந்த உலகத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்த சேவலும் நான் கோழியை விட உயர்ந்தவன் என்று கூறுவதில்லை. எந்த ஆண் மயிலும் நான்தான் அழகானவன் என்று தன் தோகையே விரித்து பெருமை பேசியதில்லை. ஆனால் இயற்கையிலேயே எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம்தான் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆண் சிங்கம், ஆண் யானை, சேவல், ஆண் மயில் என எல்லாவற்றிலும் ஆணினம்தான் அழகு (ஆனால் மனிதனில் மட்டும்தான் இது மாறிவிட்டது என பெண்கள் கத்துவது கேட்கிறது)

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களை மிகவும் கேவலப்படுத்தக் கூடிய ஒன்று வரதட்சணை. எதற்காக இந்த வரதட்சணை? பிள்ளை வீட்டார் சொல்வது:"இத்தனை நாள் இந்தப் பிள்ளையை வளர்த்து படிக்க வைத்து ஒரு வேலையில் அமர்த்தியிருக்கிறோமே, அதற்காக நீங்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்".

இது எப்படித் தெரியுமா இருக்கிறது, ஒரு நாய்க் குட்டியை வளர்த்து, அதற்கு பல வித்தைகளையும் சொல்லிக் கொடுத்து, நல்ல விலைக்கு விற்பது போலிருக்கிறது. ஆனால், நாயை விற்றால் அத்தோடு நாய் வாங்குபனுக்குச் சொந்தம் ஆகி விடுகிறது. ஆனால் மனிதக் குட்டி மட்டும் வாங்கியவனுக்குச் சொந்தமில்லை.

சில்ருக்கு ம்ட்டும் வரதட்சணை வாங்க வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த விதி விலக்குகள் இந்தக் கட்டுரையின் முடிவில் உள்ளது.

சாமிகளா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், கல்யாணம் ஆனவுடன் ஏதொ ஒரு மனஸ்தாபம் உங்களுக்குள் வருகிறது. அப்போது மனைவியை விட்டு விட்டு நீங்கள் மட்டும் வண்டியில் ஏறிப் போகிறீர்கள். அப்போது உங்கள் மனைவி வாசலில் நின்று உங்களைப் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? "அட மானங்கெட்டவனே, நான் மட்டும் வேண்டாம், எங்கப்பன் வாங்கிக் கொடுத்த வண்டி மட்டும் வேண்டுமா?" ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களே, தேவையா இந்த கேவலம்?

ஆண்களின் பதில் என்னவென்றால். "நாங்கள் என்ன செய்வது! எல்லாம் எங்க அம்மாவின் ஆசை. அவர்களின் ஆசைக்கு நாங்கள் தடை போட முடியாது. எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். அவர்களை எதிர்த்து நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்". அட நாதரிப் பசங்களா, நல்ல விலை படியாவிட்டால் உங்கம்மா உங்களிடம் வந்து "மகனே உனக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. ஆகவே, உன்னை அடிமாட்டு விலைக்கு விற்பதை விட, விற்காமல் சும்மாவே வைத்திருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆகவே நீ பிரம்மச்சாரியாகவே இருந்து விடு" என்று சொன்னால் அதுவும் அம்மாவின் ஆசைதானே என்று சரி சொல்லுவீர்களா?

அல்லது அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட்டு ஒரு அதிபயங்கர குரூபிக்குக் கட்டி வைத்தால் ஒப்புக்கொள்வீர்களா?

நிச்சயம் இது இரண்டும் நடக்காது.

ஆகவே அம்மாவின் ஆசை, அவர்கள் பேச்சைத் தட்ட மாட்டேன் என்பதெல்லாம் சும்மா பிலிம். இவனுக்குன் உள்ளுக்குள் ஆசை உண்டு. நோகாமல் நோம்பு கும்பிட நம் ஆளுங்களை விட்டால் வேற யாருண்டு?

பெண்மணிகளே, வரதட்சணை குடுத்து கலியாணம் செய்து கொண்டு போகிறீர்களா? சமயம் கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் கொண்டு வந்த சீர்வரிசை மற்றும் வரதட்சணையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் அவனுக்குள் இருக்கும் வறட்டு கர்வம் அடங்கும். இப்படியெல்லாம் பேசினால் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறானா? அல்லது விவாகரத்து என்று பேசுகிறானா? கவலையே படாதீர்கள், இன்னும் சற்று அதிக வரதட்சணை கொடுத்தால், இன்னும் நல்ல மாடல் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கலாம்.

ஆண்களே, விலைக்கு விற்கும் நாய்களா நீங்கள்? விலங்குகளை விட உயர்ந்தவன் மனிதன். அந்த மனிதர்களிலே உயர்ந்தது ஆணினம் என்று கர்வம் கொண்டு நடக்கிறீர்களே, உங்கள் நிலைமை இதை விடக் கேவலமாகப் போக முடியாதப்பா. ஒரு ஆண் என்பவன் பெண்ணைத் தனது ஆண்மையாலே கட்டிப் போட வேண்டும். (ஆண்மை என்று நான் கூறுவது, பழனி சித்தர் சிட்டுக்குருவி லேகிய சமாசாரம் இல்லை). ஆண்மை என்பது சொல்லிலே, செயலிலே, கம்பீரத்திலே, நடையிலே உள்ளது. வள்ளுவர் "பிறன் மனை நோக்காப் பேராண்மை" என்று கூறுகிறாரே அதுதான் ஆண்மை. படுக்கறையிலே காட்டுவதல்ல ஆண்மை. காசு கொடுத்து வாங்கப் படும் ஆண்மகனிடம் ஆண்மை உள்ளதாக ஒரு பெண் எண்ணுவாளா? ஆரம்பமே அசிங்கமாக இருக்க வேண்டுமா?

உங்கள் மனைவியின் மனதிலே முதலில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை கடைசி வரையில் சந்தோஷமாக இருக்கும்.

சரி, சில பேர் மட்டும் வரதட்சணை வாங்கலாம் என்று சொன்னேனல்லவா! அந்தப் பட்டியல் இப்போது:

கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள், ஜடங்கள், வெக்கங்கெட்டவர்கள், காறித்துப்பினாலும் ரோஷம் வராதவர்கள், தான் மிகவும் கேவலமான பிறவி எந்த உண்மையை உணர்ந்தவர்கள், பொட்டைகள் (பெண்கள் மன்னிக்கவும், இந்த வார்த்தைக்குப் பெண்கள் என்று அர்த்தம் கிடையாது, பொட்டைக் கண் என்றால் ஒன்றுக்கும் உதவாத கண் என்று பொருள்), கையாலாகாதவர்கள் போன்றோர் மட்டும் வரதட்சணை வாங்கலாம்.

சாணக்யன்.

Friday, January 25, 2008

ஆணுக்குப் பெண் சமமா?

ஆண்களுக்குப் பெண் சமமா? ஆணை விடப் பெண் தாழ்ந்தவளா? ஆண்களைப் போலப் பெண்களும் எல்லாத் துறைகளிலும் வித்தியாசமின்றி நுழையலாமா? பெண்களுக்கு அடுப்பறைதான் உலகமா? வேலைக்குப் போகும் பெண்களை விட இல்லத்தரசிகள் தாழ்ந்தவர்களா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு விடையளிக்க முற்பட்டுள்ளேன். நிதானமாக முழுவது படித்து விட்டு பின்பு கருத்தொலி(Feed Back) செய்யவும்.

ஆண்களுக்குப் பெண் என்றும் சமமாக முடியாது. இரு பொருள்கள் சமமில்லை என்றால் அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று அர்த்தமாகாது. சதுரங்கம் ஒரு விளையாட்டு. கால்பந்து ஒரு விளையாட்டு. கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இவற்றுள் எது எதற்குச் சமம்? அல்லது எது எதற்குத் தாழ்ந்தது அல்லது உயர்ந்தது? கூற முடியுமா உங்களால்?

எல்லாம் விளையாட்டுக்கள் தானே?

சரி அடுத்த உதாரணத்திற்குப் போவோம்.

நம்மைப் பொறுத்தவரை சாலையில் போகும் எல்லா மாடுகளும் ஒன்றுதான், அது காளையா அல்லது என்று பசுவா என்று நாம் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. நம் கவலை எல்லாம் அது நம் மேல் முட்டக்கூடாது அல்லது நம் வண்டி அதன் மேல் மோதக் கூடாது.

ஆனால் பசுவும் காளையும் ஒன்றாகுமா? அல்லது ஏதாவது ஒன்று உயர்ந்ததா? பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. வேலை எதுவும் செய்யவில்லை என்பதற்காகப் பசுவைத் தாழ்ந்தது என்றும் கஷ்டப்பட்டு வயலில் வேலை செய்வதால் காளையை உயர்ந்தது என்றும் சொல்லலாமா?
சமத்துவம் என்று சொல்லி, காளையில் பால் கறந்து பசுவை ஏரில் பூட்ட முடியுமா?

ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.

நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?

அல்லது வலது மற்றும் இடது இரண்டுமே எனது மூளைதான் ஆகவே நாளை முதல் நான் உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை எனது இடது பக்க மூளையிலேதான் முடிவு செய்வேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?

ஆண், பெண் இரண்டு பேருமே இரு பக்க மூளைகள் போன்றவர்கள். அவரவர்களுக்குள்ள வேலைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்தாலே போறும்; யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வராது.

இரண்டு பக்க மூளையும் செயல்பட்டால்தான் ஒரு மனிதன் இயங்க முடியும். ஒரு பக்க மூளை பழுது பட்டாலும் அவன் இயங்க முடியாது.

அது போல ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் இந்த உலகில் இயங்க முடியாது. இதுதான் உண்மை. இரண்டும் ஒன்று சேர்ந்தாலே அது முழுமையான இயக்கம். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை எனும்போது உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?

ஒரு ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கும்போதுதான் அவன் தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள தன்னை விட பலத்தில் குறைந்த பெண்ணைத் தன்னை விட தாழ்ந்தவள் என்று கூறுகிறான்.

சாணக்யன் சொல்வது என்னவென்றால், பெண்ணை நீங்கள் தெய்வமாகத் தொழவும் வேண்டாம்; அவளைக் கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். எப்படி அவளுக்கு நீ தேவையோ அதுபோல உங்களுக்கும் அவள் தேவை. வண்டி ஓடுவதற்குச் சக்கரம் தேவையா அல்லது அச்சாணி தேவையா? சக்கரம் பெரியதாக இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லாமல் ஓடாது. அச்சாணி கூர்மையாக இருந்தாலும், சக்கரத்துடன் சேர்ந்தால்தான் அது பயன் தரும்; ஓடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் பிரயோஜனம். தனித்தனியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது.


அடுத்தது பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடலாமா? பெண்களின் முக்கிய வேலை குழந்தைகளை நன்முறையில் வளர்ப்பது. உடனே நான் பெண்களைக் கட்டிப் போடுகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள். குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான காரியமில்லை. அது மட்டுமல்ல, அது மற்றவர்கள் பொறுப்பில் விட அது சாதாரண விஷயமுமில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. அத்தோடல்லாமல், அவர்கள்தான் பெற்றோர்களை நாளை காக்கக் கூடியவர்கள். பாசத்துடன் வளர்ப்பதுதான் முக்கியமே தவிர, பணத்துடன் வளர்ப்பது அல்ல. குடும்ப உறவுகள் குறைபட்டுப் போன மேல் நாடுகளைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா?

வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?

இது போல ஒரு கருத்து பெண்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது. வீட்டில் இருப்பது கேவலம்; வேலைக்குப் போவதுதான் சிறப்பு என்று பல புதுமைப் பெண்கள் நினைக்கிறார்கள். அம்மணிகளே, அப்படி நீங்கள் நினைத்தால், இது நாள் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தது ஆண்கள் மட்டுமே; அப்படியானால் அவர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்தது தவறல்லவே. ஆகவே வேலைக்குப் போகும் பெண்கள்தான் மேலானவர்கள்; இல்லத்தரசிகள் கீழானவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்கும் வேண்டாம். வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.



மீண்டும் சந்திப்போம்.
சாணக்யன்: