Showing posts with label Commodity Exchange. Show all posts
Showing posts with label Commodity Exchange. Show all posts

Sunday, February 10, 2008

உலகமயமாக்கலும் ஏழைகளும்.

Commodity Exchange என்பது என்ன? ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கவும் விற்கவும் Stock Exchange உள்ளது என்பது நமக்குத் தெரியும். அது போலத்தான் விளைபொருள்களையும், சந்தையில் வியாபாரமாகும் எல்லாப் பொருட்களையும் வாங்கவும் விற்கவும் ஏற்பட்டது இது. இதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? எதற்காக இதில் வெளிநாட்டு முதலீடு கூடாது என்கிறோம்? இதனை இப்போது பார்போம்.


ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலைகள் ஏறியும் இறங்கியும் வருவது ந்ம் எல்லோருக்கும் தெரியும். ஏறினாலும் இறங்கினாலும் வர்த்தகம் தொடர்ந்து நடை பெறுகிறது என்பதும் நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல, ஏறும்போதும் சரி இறங்கும் போதும் சரி, இதனால் ஒரு சிலர் லாபமடைகின்றனர், ஒரு சிலர் நஷ்டமடைகின்றனர். இவர்கள் எல்லோரும் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வோர்தான். பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடாத யாரும் இதனால் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் Commodity Exchange என்பது அவ்வாறல்ல. இதில் வர்த்தகம் செய்யப்படுவது அனைத்தும் நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப் படுத்தும் பொருட்களேயாகும். உப்பு, பருப்பு, அரிசி, தங்கம், வெள்ளி, பெட்ரோல், பஞ்சு என எல்லா வித பொருட்களும் இங்கு வாங்கப்படுகிறது, விற்கப்படுகிறது.

நம் அன்றாட வாழ்வில், வியாபாரிகள் பலரும் இது போல வாங்கி வருகின்றனரே, இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா? இங்கேதான் இருக்கிறது சங்கடம்.

வியாபாரிகள் பொருட்களை வாங்கும்போது, அவற்றை உற்பத்தியான இடத்திலுருந்து தங்களது இடத்திற்குக் கொண்டு சென்று, கிடங்குகளை வாடகைக்கு எடுத்து அதிலே அவற்றைச் சேர்த்து, பிறகு வியாபாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால் இந்த பொருள் சந்தையில் (Commodity Exchange) வர்த்தகம் செய்வோர் அவ்வாறு பொருட்களை எடுத்துச் செல்வதில்லை. பொருட்கள் விற்பவரிடமே இருக்கும். பொருளின் விலையில் 5% முதல் 20% மட்டுமே கை மாறும். ஒரு குறிப்பிட்ட கால அளவின் முடிவில், அதனை விற்று விட்டு, லாபத்தை மட்டும் அள்ளிச் செல்கின்றனர்.

பங்குச் சந்தையில் விலைகள் ஏறும் போதும் இறங்கும் போதும் பரவலாக லாபம் அடைகின்றனர் என்று பார்த்தோம். ஆனால் இந்த பொருள் சந்தையில், விலை ஏறும் போது மட்டுமே எல்லோரும் லாபமடைகின்றனர். உதாரணத்திற்கு, இந்த மாதம் நான் ஒரு கிலோ ரூ.50 என்று ஒரு டன் உளுத்தம் பருப்பு வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாத முடிவில் அதன் விலை ஒரு கிலோ ரூ.55 என்று வைத்துக் கோண்டால், நான் அடையும் லாபம், ரூ.5,000. இதற்காக நான் முதலீடு செய்தது ஒரு டன் பருப்பின் விலையான ரூ.50,000-ல் 10% ஆன ரூ.5,000 மட்டுமே. ஆக வெறும் 5000 ரூபாய் முதலீடானது எனக்கு ஒரு மாத முடிவில் 5000 ரூபாய் லாபத்தைப் பெற்றுத் தருகிறது.

யாரோ லாபம் அடைவதில் உங்களுக்கு என்ன வந்தது? பொறாமையால் எரியாதீர்கள் என்று கூறுபவரா நீங்கள்? ச்ற்றே பொறுங்கள்.

பங்குச் சந்தையில் லாபமே நஷ்டமோ அது அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், இந்தப் பொருள் சந்தையில் லாபமடைதால் பாதிக்கப் படுவது பொதுமக்களாகிய நாம்தான். பருப்பின் விலை கிலோவிற்கு ரூ.5 ஏறினால், அதன் தொடர்ச்சியாக அதனை மூலப் பொருளாகக் கொண்ட இட்லி, வடை, அப்பளம் முதலிய எல்லாப் பொருள்களும் விலையேறத்தான் செய்யும். இது பருப்பிற்கு மட்டுமான உதாரணம். இது போல பிற பொருட்களின் கதியை யோசித்துப் பாருங்கள்.

இப்போது புரிகிறதா இதன் கொடூரம்?

அடுத்ததாக, பொருள் சந்தையில், விலை ஏறினால் மட்டுமே எல்லோருக்கும் லாபம். ஆகவே, இதில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கமே பொருளின் விலையை எப்படியாவது ஏற்றுவதில் மட்டுமே இருக்கும். பண பலம் குவிந்துள்ள பண முதலைகள், இதற்காகவே அயராது பாடுபடுகின்றனர். இந்தியாவில் விளையும் கோதுமைக்கு ஒரு டன்னுக்கு ரூ.800 கொடுக்க மறுக்கும் அரசாங்கம், ஆஸ்த்ரேலியாவிலுருந்து இறக்குமதி செய்யும் கோதுமைக்கு ஒரு டன்னுக்கு ரூ.1200 கொடுப்பதன் நோக்கமென்ன? உள்நாட்டில் தொழில்கள் நசித்துப் போக வேண்டும்; வெளிநாட்டு விவசாயிகள் நிம்மதியாக இருக்க வேண்டும். இது எங்கேயோ படித்த மாதிரி உள்ளதா? கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் ஆட்சி செய்தபோது கடைப்பிடித்த கொள்கைதான் நண்பரே இது.

பணபலம் நிறைய உள்ளதால், அரசாங்கத்தின் கொள்கைகளையே தங்களுக்குச் சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் இந்தப் பொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள கனவான்களிடம் உள்ளது. இதனால் பாதிக்கப் படுவது நாம்தான் நண்பரே.

இதனால்தான் சீனாவில், இந்தப் பொருள் சந்தையையே தடை செய்துள்ளனர். எதற்கெடுத்தாலும் சீனாவின் சந்தைப் பொருளாதரத்தையும், அதன் வளர்ச்சியையும் மேற்கோள் காட்டும் நம் அரசியல்வாதிகள், இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?

அமெரிக்காவில் தலை தூக்கியுள்ள Neo-Conservativeகளின் கொள்கையும் இதுதான். வறுமையை ஒழிக்க ஒரே வழி, ஏழைகளே இல்லாமல் செய்ய ஒரே வழி; ஏழைகள் எல்லோரையும் அழித்து விட வேண்டியதுதான். நல்ல கொள்கை.

எந்த விதமான உடலுழைப்பும் இல்லாமல், குறைந்த அளவே ரிஸ்க்குடன், பொருள் சந்தையில் வேட்டையாடும் இந்த பண முதலைகளால், மக்கள் பாதிக்கப் பட்டால், அரசியல்வாதிகளுக்கு என்ன?

ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மக்கள் மாறிவிட்ட பிறகு, உரிமைகளைப் பற்றியும், தங்கள் வாழ்வுரிமை பாதிக்கப் படுவதையும் யார் சிந்திக்கப் போகிறார்கள்?

ஒன்று மட்டும் நிச்சயம் நண்பர்களே! நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் உள்ளேன். விலை ஏற்றங்கள் என்னை பாதிக்காது என்று சும்மா இருந்தால், இன்று உங்களுக்குக் கீழே உள்ள ஏழைகள் அழிந்த பிறகு, அடுத்த குறி நீங்கள்தான். அடுத்த வீட்டில் பற்றி எரியும் நெருப்பு இது. உங்கள் வீட்டிற்குப் பரவாது என்று மனப்பால் குடிக்காதீர்கள். ஏழை அழுத கண்ணீர் வீண் போவதில்லை.