Friday, July 5, 2013

காதலா....காதலா

நான் டெல்லிக்கு முதன்முதல்ல போனப்ப எனக்கு 19 வயசுதான்...வீட்டிலே லூட்டி தாள முடியலேன்னு ஸ்கூல்ல சேக்கும்போது வயசுலே ஒண்ணு சேத்து பொய் வயசு சேத்து விட்டதால், கடைசி வருடம் முடிக்கும் வரை தயவு செய்து 6 மாதம் அவகாசம் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முகம்/பெயர் தெரியாத ஸ்டாஃப் ஸெலக்ஷன் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டு ப்ளானிங் கமிஷனால் எடுத்துக்கொள்ளப்பட்ட அண்டர் ஸெக்ரட்டரியிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக காலேஜ் முடிந்த அடுத்த நாளே ஜி டி எக்ஸ்பிரஸில் ஏற்றி விடப்பட்டு ஒரு ஏப்ரல் மாத முடிவில், வெய்யில் கொளுத்த ஆரம்பித்த நாட்களில் காலை 1130 மணிக்கு வழக்கமான தாமதத்துடன் இறங்கியபோது என்னை வரவேற்கக் காத்திருந்தது -- குமாரும், வெற்றியும்...

என்னோட ஒண்ணுவிட்ட அண்ணாவோட ரெண்டாவது மச்சினனோட கூட வேலை செய்யறவனோட மச்சினி டெல்லியேலே வேலை செய்யறாளாம் -- அவளோட கூட வேலை பாக்கறவன்தான் இந்தக் குமார், அவனோட ரூம் மேட்தான் வெற்றி...

ஏற்கனவே என்னோட ஒரு போட்டோவை அனுப்பி வெச்சிருந்ததால் அவன் ஏதோ செக் போஸ்டிலே தீவிரவாதியைத் தேடற போலீஸ் மாதிரி அவன் கையிலே போட்டோவை வெச்சிண்டு என்னைத் தேடிண்டி நடந்து வந்துண்டிருந்தான்.

என்னோட டிக்கெட் ஆர் ஏ ஸி யா இருந்ததாலே கோச்/பெர்த் நம்பர் அவனுக்குத் தெரியப்படுத்த முடியலே... நான் கிளம்பினது வெள்ளிக் கிழமை ராத்திரி...ஸோ, நோ ஆஃபீஸ்... நோ ஃபோன்...

குமார் என்னவோ ஜாலியாத்தான் என்னை வாங்கன்னான்... ஆனா கூட வந்த வெற்றிதான் என்னவோ நான் அவன் டாவடிச்ச ஃபிகரை நான் தட்டிட்டுப் போனா மாதிரி வெளிப்படையா உர்ருனு இருந்தான்...

நான் கையிலே ஒரு பையும் இந்தக் கையிலே ஒரு வெயிட்டான் ஸூட்கேஸும் வச்சுண்டிருந்தேன்... படுபாவிங்க ஒரு வார்த்தைக்குக்கூட நான் எடுத்துக்கட்டான்னு கேக்கலே...கொஞ்ச தூரம் நடந்து போயிண்டிருக்கும்போது, அவன் கூட வொர்க் பண்ற ரெண்டு பேர் அதே வண்டியிலே வந்து இறங்கியிருக்கா...உடனே இவன் போய் அவங்க கையிலிருந்து ரெண்டு ஸூட்கேஸையும் வாங்கிண்டு தூக்க முடியாம தூக்கிண்டு நடக்கிறான்...ஆமாமாம்,, நீங்க நினச்சது சரிதான்... அந்த ரெண்டு பேரும் ஆணல்ல...

வெளியே போனதும், அந்த ரெண்டு பேரையும் கூட்டிண்டு போக ரெண்டு எமகிங்கரன் மாதிரி அவாளோட ஃப்ரெண்டுகள்...இவனும் இளிச்சுண்டே அவாளுக்கு பை சொல்லிட்டு வந்தான்...

நான் ஒரு ஆட்டோவாவது கூப்பிடுவான்னு நினைச்சேன்,, படுபாவி ஒரு சைக்கிள் ரிக்ஷாவைத்தான் கூப்பிட்டான்... மூணு பேரு, அந்த சின்ன ரிக்ஷாவிலே...கஷ்டம்...

அதுக்கப்புறம் வெற்றி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டானதோ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குமாரைக் கலாய்ச்சதோ அதெல்லாம் பெரிய கதை...

அப்பவே குமாருக்கு 35 வயசு... நான் போன ரெண்டு மாசத்திலே அவன் பாண்டிச்சேரிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு போயிட்டான்...அதுக்கப்புறம் நான் அவனை பல வருஷமா பாக்கலே...

அதுக்கப்புறம் நான் தமிழ்நாட்டிலே வேற ஊரிலே வேலைக்குச் சேந்ததும், காதல், கல்யாணம் எல்லாம் தனிக் கதை...

அப்போ என் மனைவி பிரசவத்துக்காக மெட்ராஸிலே லீவிலே இருந்த நேரம்...நானும் வார இறுதியில் மெட்ராஸுக்கு வந்தவன் பஸ் ஸ்டாண்டிலே காத்திருந்த போது குமாரை மறுபடியும் பார்த்தேன்...அதே முன் வழுக்கை...அதே தாடி...

"டேய் குமார்?"

"டேய் நீயா?, இங்கே என்னடா பண்றே?"

"எங்க வீட்டுக்குப் போறேண்டா, நீ?"

"நான் திருவான்மியூரிலேந்து இங்கே வந்துட்டேண்டா...நானும் அப்பாவும் இப்போ இங்கேதான்,...தம்பி கிருஷ்ணா இப்போ பெங்களூரிலே, சரிடா நீ ஆத்துக்கு வாயேன்"

"இல்லேடா குமார், அவளுக்கு இது டெலிவரி டயம், நான் கூட இருக்கணும்னுதான் லீவு போட்டுட்டு வந்துருக்கேன், சீக்கிரம் போகணும்டா"

"என்னது டெலிவர் டயமா? உனக்குக் கல்யாணம் ஆகிடுத்தா?"

"டேய் முட்டாள் குமார், கல்யாணம் ஆனாதான் வைஃப், அப்புறம்தான் டெலிவரி எல்லாம்" என்றேன்.

"என்னோட வயசுலே பாதிதாண்டா உனக்கு, ஆனா நீ அப்பாவாகப் போறே, நான் இன்னும் ஹஸ்பண்டாவே ஆகலேடா"

"என்னடா குமார் சொல்றே? இன்னுமா ஆகலே?"

"ஆமாண்டா, ஹிண்டுலே குடுத்துப் பாத்தாச்சு, 74 ஜாதகம் வந்தது...அதுலே 8 எனக்குப் பிடிக்கலே...6 இடத்திலே அவாளுக்கு என்னப் பிடிக்கலே... 12லே நான் போகறதுக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுத்து..."

நான் உடனே கணக்கு போட்டு "மீதி 48 என்னடா ஆச்சு?"

"அந்த ஜாதகமெல்லாம் பொருந்தலேடா"

"ஏண்டா 48 ஜாதகமுமா பொருந்தலே? எவண்டா ஜாதகம் பாத்தது?"

"டேய், சும்மா இருடா, எங்கப்பாதாண்டா ஜாதகம் பார்த்தார். நான் ஜாதகத்தை மாத்தலாம்னு இருக்கேன்"

"போடா ஃபூல், ஜாதகத்தை மாத்தாதே, குமார், உங்கப்பனை மாத்து"

இது நடந்து சுமார் 5 வருஷம் கழித்து மறுபடியும் ஒரு ஆச்சரியமான சந்திப்பு...போனில் ஒரு குரல்..எங்கேயோ கேட்ட குரல்...உடனே நான் கேட்டேன் இந்தக் குரலுக்கு ஒரு தாடியிருக்கான்னு... அந்த முனையில் ஆச்சரியம்...அப்புறம் நானே சொன்னேன் டேய் குமார், நாந்தாண்டான்னு...

அன்னிக்கு மத்தியானம் வீட்டுக்கு வந்தான்...இன்னும் பாண்டிச்சேரி தூர்தர்ஷனில்தான் வேலையாம்... ரூம் எடுத்து தங்கியிருக்கானாம்...சொந்த சமையல்...

எனக்கு சங்கடமாயிருந்தது....அப்போதான் என் பையன் ஸ்கூல்லேந்து வந்தான்...ஆனா இவன்... இன்னும்....

இந்தக் காலத்திலே பெற்றவர்களின் சுயநலம் பிள்ளைகளை ரொம்பவும் பாதிக்கிறது...அப்பா மட்டும்தான் குமாருக்கு....அம்மா இல்லை...தம்பியோ ஒரு தறுதலை...அதனால ஒரு மருமக வந்துட்டா அவள் நம்மளை கூட வச்சுக்கலன்னா என்ன ஆகிறதுன்னு யோசிச்சு இவன் கல்யாணத்துக்கு ஏதாவது ஒரு தடை போட்டுண்டே வந்து இப்போ அவனுக்கு 40க்கு மேலே இருக்கும்...அப்பாவோட சுயநலம் இவனோட வாழ்க்கையையே பாழடிச்சிருச்சே...

தனியா ரூமிலே தங்கிண்டு...தானே சமைச்சிண்டு...கஷ்டம்டா சாமி...

சரி ஒரு நாளாவது நல்லா சாப்பிடட்டுமேன்னு "குமார், இன்னிக்கு ராத்திரி நம்மாத்துலேயே சாப்பிடலாமே"

"ஸாரிடா, இன்னொரு நாள் வரேன்... இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லையா, நா இன்னிக்கு சீக்கிரமே கிளம்பி, மெட்ராஸ் போய், அவளையும் அழைச்சிண்டு, குழந்தையை அவா அண்ணாவாத்திலேந்து கூட்டிண்டு வரணும்.. நான் இன்னொரு நாளைக்கு சாவகாசமா வரேனே"

அப்போ நிஜமாகவே ஜாதகம் பொருந்தாமத்தான் கல்யாணம் தட்டிப் போயிடுத்தோ? நான் என்ன அசட்டுத்தனமா அவனோட அப்பாவைத் தப்பா நினைச்சிண்டிருந்தேன்...என்ன ஒரு முட்டாள் நான்..

இப்போது நான் அந்த அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டேன் "குமார், உனக்குக் கல்யாணமாயிடுத்தா?"

 கண்ணடித்தபடியே சொன்னான் "நீ சொன்னதுதாண்டா கரெக்ட்...அப்பாவை மாத்திட்டேன்...ஜாதகத்தை இல்ல... இது ஒரு மாதிரி அரேன்ஜ்ட் லவ் மாரேஜ்

டூ மினிட்ஸ்

டூ மினிட்ஸ் --- இன்னிக்கு உலகமே இதுலதாங்க ஓடிட்டிருக்கு... எல்லாமே இன்ஸ்டண்ட்...இப்ப... இப்ப... இப்பவே....
அதனால நானும் ரொம்ப சுருக்கியிருக்கேன்...ஸோ இதப் படிக்க உங்களுக்கு டூ மினிட்ஸ்தான் ஆகும்...

நல்ல கொளுத்தற வெய்யில்லே ஹெல்மெட் இல்லாம, வேர்த்தி வழிய பைக்கிலே சிக்னல்லே நிந்துண்டிருந்தேன்...அது வேற 118...117..116ன்னு சோதனையாயிருந்தது...

திடீர்னு என்னோட பைக் ஆடினா மாதிரி இருந்தது...சுதாரிச்சு திரும்பிப் பார்த்தா யாரோ ஒரு பெண்...வெள்ளை சுடிதார்....பல வண்ண பச்சை நிற துப்பட்டாவால தலையை மூடியபடி...எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலே...

அவளே பேசினா "தயவு செஞ்சு திரும்பிப் பாக்காதீங்க... இன்னும் 48 செகண்ட் இருக்கு...உடனே வண்டியக் கிளப்புங்க... நான் எல்லாம் அப்புறம் சொல்றேன்...ப்ளீஈஈஈஈஸ்"

நானும் ஈஈஈஈஈஸினேன்...

ஒரு பத்து நிமிஷம் ஏதும் பேசாமல் வண்டி ஓட்டினேன்...ச்சே...இந்த நேரம் பாத்து ரியர் வ்யூ மிரர் எசகேடா திரும்பி இருந்தது...அவள் எப்படி இருப்பாள்னு கூடத் தெரியாமல் நானும் அவளைப் பின்னால் வைத்து....

திடீரென்று தோளைத் தொட்டாள்...."இங்கே நிறுத்த முடியுமா?" மறுபடியும் ப்ளீஸ்....

உடனே வண்டியை ஓரங்கட்டினேன்....

இறங்கியவள் முகத்தை மூடிய துப்பட்டாவை நீக்கி என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே "தேங்க்ஸ் ய மில்லியன்"...அவ்வளவுதான்....நான் பாத்துண்டிருக்கும்போதே காற்றிலே மிதந்து சென்று விட்டாள்

அவள் என்னைக் கடந்து செல்லும்போது அவள் போட்டிருந்த பெர்ஃப்யூம் என்னைக் கடந்து செல்லும்போது அண்ணாசாலையை ஒரு நிமிடம் சொர்கமாக்கியது...

என்னையே நான் நொந்து கொண்டேன்...அவள் பேர் கூடக் கேட்கவில்லையே...எப்படி நான் கனவிலே டூயட் பாடுவது...குடும்பம் நடத்துவது....ஹூம்...எனக்குக் கனவில் கூட அவள் கொடுத்து வைக்கவில்லை....

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்...ஹிக்கின்பாதம்ஸில் வழக்கம்போல பிக்சர் போஸ்ட்கார்டுகள் வாங்கிக்கொண்டிருந்தேன்... அப்போது கவுண்டரில் ஏதோ சலசலப்பு கேட்க திரும்பினேன்...மை காட்...இதென்ன கனவா? அன்று என்னுடன் வண்டியில் வந்த அதே தேவதை...

அவள் ஏதோ சங்கடத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் மெதுவாக அருகில் சென்றேன்...ஒரு வித பதட்டத்துடன் இருந்த அவள் என்னைப் பார்த்ததும் முகத்தில் காற்றாலை மின்சாரத்தில் கரண்ட் வந்த மாதிரி பரவசம்...

"எக்ஸ்யூஸ் மி, இன்னிக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?"

நான் எதுவும் பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் தலையாட்டினேன்.

"நான் அவசரத்துலே எங்கப்பாவோட க்ரெடிட் கார்டை எடுத்துண்டு வந்துட்டேன்...ஒரு ஆயிரத்து நூறு ரூபாய் இருக்குமா உங்ககிட்டே...வெளியே போய் எடுத்துத் தந்திர்ரேன்"

என்ன எழவுடா இது, புது மாதிரி ஃப்ராடா...ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி பாத்ததுனால நம்பாம இருக்கவும் முடியலே...சரி ஆயிரத்து நூறுதானே பாத்துக்கலாம்...

"நோ ப்ராப்ளம்" என்றபடியே என் டெபிட் கார்டை எடுத்துக் கொடுத்தேன்...

எனக்காகக் காத்திருந்து வெளியே வந்தாள்.. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் பக்கத்திலிருந்த ஏ டி எம்மிலிருந்து க்ரெடிட் கார்டில் காஷ் எடுத்துக் கொடுத்தாள்..."எங்க குடும்பத்துக்கே ஒரே பின் நம்பர்தான்" என்று புன்னகைத்தாள்.

நான் பதில் பேசுவதற்குள் அவள் அருகில் ஒரு கார் வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டாள்...உடனே கார் புறப்பட்டது...

இன்னிக்கும் அவள் பேர் கேட்கவில்லை...ஆனாலும் பேரில்லாவிட்டால் என்ன...கனவில் குடும்பம் நடத்த பேர் அவசியமா...

மறுபடியும் அடுத்த வாரம் எங்கேயாவது அவள் வருவாளான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்...

கடவுள் ஒரு மாசத்தில் கண்ணத்திறந்திட்டார்...நான் ஏ டி எம்மில் பணம் எடுக்க கார்டை விட்டவுடன் என்ன கண்றாவியோ அது கார்டை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு, உங்கள் ப்ரான்ச்சை அணுகவும் என்று அட்வைஸ் பண்ணியது...இப்போது பணம் இல்லாமல் நான் என்ன பண்ணுவது?

ஆத்திரத்துடன் மெஷினைக் குத்துவது போல கையை ஓங்கினேன்...அதானே நான் செய்ய முடியும்...நான் ஏதாவது குத்த அது ஏதாவது உடைஞ்சி போயி காமிராவிலே ரெகார்டி ஆகி வீடு தேடி வந்து நஷ்ட ஈடு கேட்டால் நான் என்ன பண்ணுவேன்...

நொந்தபடியே வெளியே வந்தால் அதே தேவதை...

"என்ன ஆச்சு?"

"கார்டை முழுங்கிடுச்சு"

"நோ ப்ராப்ளம், உள்ளே வாங்க" என் கையைப் பிடித்து உள்ளே இழுத்தபடி பக்கத்திலிருந்து இன்னொரு மெஷினில் அவள் கார்டை சொருகினாள். "எவ்வளவு வேணும்?"

"அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க"

"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணும்போது? சொல்லுங்க.. எவ்வளவு?"

நான் சும்மா இருப்பதைப் பார்த்ததும் அவளே 25000 எடுத்து என் கையில் திணித்தாள்...என் அக்கவுண்டில் இருப்பதே மொத்தம் 3000தான்...நான் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல பணத்தை எடுத்து என் ஷர்ட் பாக்கெட்டில் வைத்தாள்...

"உங்க அட்ரஸ், மொபைல் நம்பர் கொடுங்க நான் நாளைக்கே பணத்தைத் திருப்பித் தந்துட்றேன்"

மறுபடியும் அதே மயக்கும் புன்னகையுடன் "இந்த உலகம் ரொம்ப சின்னது... மறுபடியும் நாம கட்டாயம் சந்திப்போம்... அப்போ வாங்கிக்கறேன்" என்று சொல்லிவிட்டு சட்டென மறைந்து விட்டாள்...

என்ன அதிசயம் இது....அவள் ஃப்ராடோ என்று நான் நினைத்ததை எண்ணி எனக்கே கூசிற்று...

நானும் கொஞ்ச நாள் தினமும் ஹிக்கின்பாதம்ஸுக்குப் போனேன்... ஆனால் அவளைக் காணவில்லை...25000 ரூபாயைத் தனியாக ஒரு கவரில் போட்டு பத்திரமாக பைக்குள் வைத்திருந்தேன்..

ஒரு பத்து நாள் போயிருக்கும்...சுமார் 4 மணியிருக்கும்...ஒரு டீக்கடையோரம் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு சிகரெட்டைப் பத்த வைத்தேன்...அப்போது என்னருகே அந்தக் கார் வந்து நின்றது...

கண்ணாடியை இறக்கியபடி அவள்...அதே தேவதை..."ஹாய் எப்படி இருக்கீங்க..."

நான் அவசர அவசரமாக பையைத் திறந்து...பையையும் கையையும் சேர்த்து இழுத்தாள் காருக்குள்ளே...

நான் எதுவும் சொல்வதற்குள் கார் கிளம்பியது... ஆஹா வெளியே அடித்த வெய்யிலுக்கு உள்ளே இருந்த ஏ ஸி யும், மெலிதான கத்ரியும்...நாரதர் இருக்கிறாரா பக்கத்தில் என்று பார்த்தேன்...

கார் நேராக காஃபி ஷாப்பிற்குச் சென்றது...

பைக்கை பூட்டினேனா?

உள்ளே நுழைந்ததும் எனக்கு மனசே சரியில்லை...

அவளே ஆர்டர் செய்தாள்.. நான் பையைத் திறந்து அந்தக் கவரை எடுத்துக் கொடுத்தேன்..

 வாங்கியவள் "ரொம்ப நாளா இந்தக் கவரை வச்சிண்டு அலயறீங்க போலிருக்கே"

எப்படி என்பது போலப் பார்த்தேன்.

"அதான் கவர் ரொம்பவும் நசுங்கிப் போயிருக்கே" என்று சிரித்தாள்.

நான் சங்கடமாகச் சிரித்தேன்...

"சரி, சொல்லுங்க உங்க பேர், என்ன பண்றீங்க..."

நானும் இண்டர்வியூவில் ஒப்பிப்பது போல மட மட வென்று...

சொல்லி முடித்ததும் கேட்டாள் "ஆர் யூ மேரீட்?"

இப்படி நேரடியாகக் கேட்டது எனக்கு என்னவோ போலிருந்தது...இல்லை என வேகமாகத் தலையசைத்தேன்..

இப்போது என் கண்களை நேராகப் பார்த்து அமைதியாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள் "ஆர் யூ வில்லிங் டூ மேரி மீ?"

நான் ஆடிப் போயிட்டேன்...அதிர்ச்சியை என் முகம் காட்டிக் கொடுத்து விட்டது.

"நீங்க அதிர்ச்சியடைஞ்சதிலே ஆச்சரியமில்லே... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது...என்னைப் பத்தி எதுவுமே தெரியாது..நான் ஒரு அழகான பொண்ணுங்கறதைத் தவிர...என் மேல ஆசையிருக்கலாம்...ஆனால் அது காதலாக முடியாது இல்லையா?"

"இவ்வளவு ஓப்பனாக யாரும் பேசி நான் கேட்டதில்லை"

"கரெக்ட் உங்களோட இந்த வெகுளித்தனமும் உண்மையும்தான் எனக்குப் பிடிச்சது...யூ ஸீ, நான் பணத்திலேயே பிறந்து பணத்திலேயே குளிக்கற ஜாதி,,, அதனால எனக்குப் பணத்தைப் பார்த்தாலே ஒரு அவெர்ஷன்... அதுக்காக பணமே வேண்டாங்கலே...ஆனா பணத்தை மதிக்கிற ஒருத்தன் என் ஹஸ்பண்டா...சான்ஸே இல்லே....அதனாலதான் உங்கள..."

எது மாதிரியுமில்லாமல் ஒரு மாதிரியாக தலையாட்டி விழித்தேன்...

"என் மேலே ஆசை மட்டுமில்லாமல் உங்களுக்கு காதலும் வரும் அப்படீன்னா, அடுத்த வாரம் புதன்கிழமை காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸுக்கு வந்துடுங்க... மறக்காம உங்க சைடிலேந்து ஒரு விட்னெஸ்...நானும் என் சைடிலேந்து ஒரு விட்னெஸ்"

நான் தந்த கவரை என்னிடமே திருப்பித் தந்தாள்..."கல்யாண ட்ரெஸ்ஸுக்கு பெண் வீட்டுலதான் பணம் தரணும் தெரியுமா"

மறுபடியும் ஒரு ஆட்டோ பிடித்து டீக்கடை போய் சேர்ந்தேன்...நல்ல வேளை வண்டியைப் பூட்டியிருந்தேன்...அதன் மேல் சாய்ந்திருந்தவர் சாரி சொன்னபடியே நகர வண்டியை ஸ்டார்ட் செய்தேன்...

ராத்திரி ரூமில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மொபைல் கதறியது...யாருடா அது இந்த நேரத்தில்... ஏதோ ஒரு புது நம்பர்...கடுப்புடன் ஹலோ என்றேன்... மறுமுனையில் என் தேவதை...

"என் நம்பர் உங்களுக்கு எப்படிங்க தெரியும்?"

"முட்டாள் காதலா, நீ மொபைலை டேபிளில் வைத்து விட்டு பையைக் கவரில் தேடிக்கொண்டிருந்தபோது உனக்குத் தெரியாமல் உன் மொபைலில் இருந்து என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால்"

என் போனில் சார்ஜ் தீர்ந்து விழும் போது மணி 3...

எப்போடா புதன்கிழமை வரும் என்று இருந்தது...

என் நண்பனுடன் கோடம்பாக்கம் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போனேன்... மணி 11 ஆயிற்று....அவள் வரவில்லை....

நில்லுங்க சார் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை...ட்ராஃபிக் ஜாம்...அவளே போன் பண்ணி சொல்லிட்டாள்..ஆச்சு இதோ என் தேவதை காரிலிருந்து இறங்குகிறாள்...

நம்புங்க சார், எங்க கல்யாணம் நடந்து இன்னியோட 6 மாசம் ஆயிடுச்சு... இப்போல்லாம் எல்லாமே இன்ஸ்டண்ட்தான் சார்...

அது சரி இங்கே என்ன பண்றேன்னு கேட்கறீங்களா?

டிவோர்ஸ் ஆன் ம்யூச்சுவல் கன்ஸெண்ட்...எனக்கு இஷ்டமில்லைதான் ஆனாலும் என் தேவதைக்காக எது வேணாலும் செய்வேன் சார்... அதே அப்போவே சொன்னேனே இப்போல்லாம் எல்லாமே இன்ஸ்டண்ட்தான் சார்...

ஆனா எனக்கு ஒரு விஷயம்தான் இன்னிவரைக்கும் புரியவேயில்லை சார்...அன்னிக்கு அவசரமா என் பைக் பின்னாடி வந்து ஏறினாளே, அது எதுக்காக? 

நாராயாண


"நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?"

 

"விநாயகா, அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்."

 

"அப்போது அம்மையப்பனைச் சுற்றி வந்தால் உலகத்தைச் சுற்றி வந்ததாகத்தானே அர்த்தம்?"

 

"இதிலென்ன சந்தேகன் விநாயகா?"

 

"அம்மையப்பனே, நான் உங்களை மூன்று முறை வலம் வந்து விட்டேன், அந்த மாம்பழம் எனக்கே"

 சும்மா பொழுது போகமல் திருவிளையாடல் படம் டி வி டி ல பார்த்தேங்க. வசனம் ரொம்ப நல்லா இருந்தது.


இதுக்கும் --- திருச்சி சிவாவுக்கு பதிலாக கவிதாயினி கனிமொழிக்கு ராஜ்யசபா எம் பி சீட் கொடுத்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ, நீங்களா நினைச்சுண்டா அதுக்கு நான் பொறுப்பில்லீங்கோ

 

 

நல்ல நேரம்


நான் மொதமொதல்லே யானையைப் பாத்தது அஞ்சாப்பு படிக்க சொல்லோ. அப்போ எங்க ஊருக்கு தலைவர் நடிச்ச நல்ல நேரம் படம் வந்திச்சா, அந்த படத்தோட போஸ்டர் ஊரெல்லாம் ஒட்டிருந்திச்சி,  நான் அம்மாகிட்டே என்னிய படத்துக்குக் கூட்டிப்போம்மான்னு சொன்னேன், அம்மாவும் சரின்னுச்சு, ஆனா பாவம் அதால முடியலே, அப்புறம் ஒருநாள் 'இன்றே கடைசி"ன்னு ஒட்டினாங்க, நான் பள்ளிக்கூடம் உட்டு வந்த உடனே அம்மாவைக் கேட்டேன், அம்மாவும் சரிடா கண்ணு, இன்னிக்கு கட்டாயம் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச்சு, ஆனா பாவம், அதுக்கு ரொம்ப வேலை, அதால என்னிய ரெண்டாவது ஆட்டத்துக்குத்தான் கூட்டிட்டுப் போச்சி, எனக்கு நல்லா தூக்கமா வந்திச்சு, மண்ணு தரை சில்லுனு இருந்திச்சா, கூட்டம் வேற இல்லியா, நான் நல்லா தூங்கிட்டேன், அம்மாதான் யானை வரும்போதெல்லாம் என்னிய எழுப்பிச்சி. அப்புறம் படம்  உட்டு வரசொல்ல அம்மா அந்த கொட்டாயிலே முறுக்கு விக்கறவரக் கேட்டு யானை இருக்க மாதிரி ஒரு போஸ்டர வாங்கி தந்திச்சு.

 

அதுக்கு அப்புறமா ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு நெசமாவே ஒரு யானை வந்திச்சு, பெரிசா நெத்தில துண்ணூறு வ்ச்சிக்கினு, கழுத்திலே ஒரு பெரிய மணி கூட இருந்திச்சி,  அன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு லீவு உட்டுட்டாங்கோ, ஏன்னா எல்லா பயலுகளும் யானைக்குப் பின்னாடிதான் இருந்தானுவோ, நானுந்தான்

 

யானை ஊரை சுத்தி வந்திச்சு,எனக்கு யானையை முன்னாடி பாக்க ரொம்ப ஆசையா இருந்திச்சி, ஆனா முன்னாடி பாக்கப்போனா நான் பின்னாடி நடக்கணம், யானையோ வேகமா நடந்திச்சா, அதனாலே நான் பின்னாடிதான் பாத்தேன். வாலை ஆட்டிக்கிடே இருந்திச்சு, ஏன்னு தெரியலே.

 

யானை வரும்போது பல பேர் அதுக்கு வாழைப்பழம், தேங்கான்னு குடுத்தாங்க,  எங்க ஊரிலே மாவு மில் வச்சிருந்த செட்டியார் யானைக்கு சூடம் காட்டி, வாழைப்பழமும் தேங்காயும் குடுத்தார், அவர் வந்தப்போ யாரோ ஒரு பய யானை வருது டோய்னு கத்தினான், அப்போ செட்டியார் பொறுக்கிப் பயலுவன்னு திட்டிக்கினே யானைக்கு சூடம் காட்டினார்.

 

யானை நடக்கும்போது எல்லாரும் அது காலடி பட்ட மண்ண எடுத்துக்கினாங்க, நான் எதுக்காகன்னு கேட்டப்போ, யானை காலடி பட்ட மண்ணை எடுத்து அதிலே செடி வச்சா நல்லா வருமுன்னு சொன்னாங்க, நானும் கொஞ்சம் எடுத்து ஒரு காயிதத்திலே கட்டி பையிலே போட்டுக்கினேன், ஊட்டுக்கு போயி அம்மா கிட்டே அதக் குடுத்தேனா, அப்போ அம்மா என்னக் கட்டிக்கினு அழுதுகினே முத்தம் குடுத்துச்சு.

 

அதுக்கப்புறம் ஒரு வாரத்திலே பெரிய மழையும் காத்தும் வந்திச்சா, நாங்க படுத்துக்கற ப்ளாட்பாரத்திலே தலைக்கு மேலெ இருந்த தார்பாய் பறந்து போயிருச்சு, ஊரெல்லாம் ஒரே தண்ணி, பள்ளிக்கூடத்துக்கு லீவு உட்டுட்டாங்க, எங்களையெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டாங்க, எங்க அம்மாவும் எங்கூட பள்ளிக்கூடத்துக்கு வந்திச்சா, நான் அதுக்கு என்னோட இடத்தைக் காமிச்சேன், அம்மாவுக்கு ஒரே சந்தோசம், எல்லார் கிட்டேயும் இதான் என் புள்ள படிக்கற இஸ்கோலு, இங்கதான் என் புள்ள உக்காந்து படிக்குதுன்னு சொல்லிச்சு, ஒரு வாரம் மழை நிக்குற வரைக்கும் நாங்க எங்க பள்ளிக்கூடத்திலதான் இருந்தோம், சோறெல்லாம் போட்டாங்க

 

 

அப்புறம் எங்க தமிழ் ஆசிரியர் யானையைப்பத்தி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார், நானும் ரொம்ப சந்தோஷமா எழுதினேன், யானை பெரிசா இருக்கும், வாலை ஆட்டிகினே இருக்கும், நெத்திலே துண்ணூறு பூசி இருக்கும், கழுத்திலே பெரிய மணி இருக்கும்னு நெறைய எழுதிக்கினு போனேனா, ஆனா தமிழ் ஐயா ஒத்துக்கலே, அப்புறமா அவர் போர்டுலே எழுதிப்போட்டார்,  யானை காட்டில் வாழும், மரம் முறிக்கும் அப்படீன்னு என்னென்னவோ எழுதிப் போட்டார், அப்பதா எனுக்கு நெனப்பு வந்திச்சு, எங்க தமிழ் ஐயா யானை வந்த அன்னிக்கு ஊரிலேயே இல்லே, அவர் ஏதோ விசேஷத்துக்கு வெளியூர் போயிருந்தார், அதான் அவருக்கு யானையைப்பத்தி ஒண்ணுமே தெரியலே

 

எனக்கு இதெல்லாம் இன்னும் நல்லா ஞாபகம் இருக்குது. ஆங், யானை காலடி மண்ணு இன்னா ஆச்சுன்னுதானே கேக்கறீங்க, இருங்க சொல்லாம போமாட்டேன்,

 

நான் அந்த மண்ணெ ரொம்ப பத்திரமாதான் வச்சிருந்தேன், ஆனா மழை வந்திச்சுன்னு சொன்னேனில்லையா, அப்போ அந்த பொட்டலம் தண்ணிலே கரஞ்சு போச்சு, மழை நின்னப்புறம் நாங்க இருந்த ப்ளாட்பாரத்தை சுத்தி நிறைய செடி மொளச்சிச்சா, அப்பதான் அம்மா சொல்லிச்சு யானை காலடி மண்ணு கரஞ்சு அதுலேதான் இந்த செடி மொளச்சிதுன்னு,

 

அதுலெ ஒரு செடிதான் இப்போ நீங்க பாக்கறிங்களே இந்த புளிய மரம், எவ்வளோ பெரிய மரமில்லீங்கோ, அதுக்கு அடியிலதான், அம்மா செத்ததுக்கு அப்புறம் நான் சம்சா விக்கிறேன், நல்லா சூடா இருக்கு சார், ஒண்ணு ரெண்டு ரூபாதான், வாங்கிக்கிறீங்களா?